இன்று மார்கழி மாதம் ஆரமிக்கிறது. மார்கழி மாதம் என்றாலே மெல்லிய குளிர், சுப்ரபாதம், கோலங்கள் எல்லாம் நியாபகத்துக்கு வருகிறது.
சின்ன வயதில் ஊரில் உள்ள பெண்கள் எல்லோரும் முதல் நாள் இரவே நாளைக்கு என்ன கோலம் போடணும்ன்னு கூடி பேசுவாங்க. அம்மா,அக்கா ரெண்டு பேர் கிட்டயும் இந்த கோலம் போடுங்க நான்தான் கலர் கொடுப்பேன்னு அடம் பிடித்த கதையெல்லாம் நியாபகத்திற்கு வருகிறது.
விடியற்காலை நாலு மணிக்கெல்லாம் எழுந்து விடுவோம். காதில் ஒரு மப்ளரை கட்டிக்கொண்டு வீட்டு வாசலில் உற்கார்ந்து கொண்டு அம்மா, அக்காவுக்கு கோலபொடி எடுத்து கொடுக்கிறது, கோலத்துக்கு கருத்துக்கள் சொல்றதுன்னு பேசிக்கிட்டே இருப்பேன்.
காலை நாலு மணிக்கெல்லாம் எங்க ஊர் கோவில்ல சுப்ரபாதம் போட்டிடுவாங்க. மார்கழி மாதம் தவிர மத்த மாதம் கோவில்ல பாட்டு போடுறதில்லை. அந்த அதிகாலை குளிரில் சுப்ரபாதத்துக்கேர்ப்ப எங்கள் பல்லும் குளிரில் தாளம் போடும், டைப்படிக்கும். அதிகாலை சுப்ரபாதம் கேட்கும் பீலிங்கே தனி.
சில நேரம் நண்பர்கள் சேர்ந்துவிட்டால் எங்கள் வீடு மட்டுமல்லாமல் அந்த குளிரிலும் எல்லோர் வீட்டு வாசலுக்கும் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு ஒவ்வொரு வீட்டு கோலத்தையும் கலாய்த்து பக்கத்து வீட்டு அக்காக்களிடம் திட்டு வாங்கி வந்த அனுபவமும் உண்டு.
கோலம் போட்டு முடிந்ததும் மாட்டு சாணியை பிள்ளையார் போல பிடித்து அதை கோலத்துக்கு நடுவில் வைத்து அதில் பூசணிப்பூ சொருவி வைப்போம். மாட்டுச்சாணியில் விதவிதமான பிள்ளையார்கள் செய்து வைப்போம். கோலத்துக்கு கலர் பண்ணுவது நான்தான்.
பொங்கலுக்கு கோல போட்டி எல்லாம் நடக்கும். அப்போ எல்லாம் விடிய விடிய கோலம் போடுவாங்க. யாருக்கும் போரடிக்க கூடாதுன்னு ஒவ்வொரு தெருவிலும் டிவி, டெக் வச்சு படம் போட்டு விட்டிடுவாங்க. எப்படியும் நாலு மணி நேரம் கோலம் ஓடும். பக்கத்து வீட்டுக்காரங்க வந்து உங்க வீட்ல கோலம் நல்லா இருக்குன்னு சொன்னா கிடைக்கிற சந்தோசத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது.
ஆனா இப்பெல்லாம் இந்த அனுபவம் கிடைக்கிறதே இல்லை. முதநாள் இரவே கோலம் போட்டுட்டு படுத்து தூங்கிடுராங்க. காலைல குளிருதாம், கோலம் போட முடியலையாம். சில நல்ல அனுபவங்களை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டு வருகிறோம்.
டிஸ்கி: இன்று காலை நாலு மணிக்கு எங்க வீட்டு பக்கத்தில் உள்ள கோவிலில் சுப்ரபாதம் போட்டதால் சீக்கிரம் எழுந்துவிட்டேன். ரொம்ப நாள் கழித்து இன்று மிக நல்ல பீலிங்.